பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
ரெட்டியார்சத்திரம் : இயற்கை அழகு சூழ்ந்த கோபிநாதசுவாமி கோயில் பகுதியை, சுற்றுலா தலமாக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள மலைக்குன்றில், கோபிநாதசுவாமி கோயில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை, ஆவணி மாத உறியடித்திருவிழா சிறப்பம்சம். சில ஆண்டுகளுக்கு முன், கால்நடைகள் வளம் பெறுதற்கான வேண்டுதல் அதிகமாக இருந்ததால், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மட்டுமே நேர்த்திக்கடனுக்காக வந்து சென்றனர். மலைமீதுள்ள கோயிலாக இருப்பதால், சுற்றிலும் மரங்கள், புல்வெளி காட்சிகளை காணமுடிகிறது. சுவாமி தரிசனத்துடன், இயற்கை அழகை பார்ப்பதற்காகவும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விசேஷ நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும், அதிகளவு பக்தர்கள் வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து பலரும், குடும்பத்துடன் வருகின்றனர். செங்குத்தாக அமைந்த மலைப்படிகளில் ஏறிச் செல்ல முடியாத நிலை, போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ரெட்டியார்சத்திரத்தில் இருந்து மலைக்கோயில் அடிவாரம் வரை பஸ் வசதியும், அங்கிருந்து மலைக்கோயிலுக்கு வாகனங்கள் செல்ல மற்றொரு சாய்வான பாதையும் ஏற்படுத்த வேண்டும்.மலையடிவார பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பூங்கா, நீருற்றை உருவாக்கி, சுற்றுலா தலமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.