பதிவு செய்த நாள்
28
மார்
2015
11:03
மயிலாப்பூர்: அதிகார நந்தி, கயிலாயத்தின் வாயிலில், சாரூப்ய நிலையில் (இறைவனை போலவே மூன்று கண்களும், நான்கு கைகளும், மானும், மழுவும் உள்ள நிலை) இருப்பார். சிவனை தரிசிக்க வருவோரை, உள்ளே அனுப்பக் கூடிய, அதிகாரத்தை உடையவரே அதிகார நந்தி. இவர், சிவனை தாங்கி வருவதே, அதிகார நந்தி வீதியுலாவாக கொண்டாடப்படுகிறது. அதிகார நந்திக்கு என, எல்லா கோவில்களிலும் உற்சவம் நடக்கிறது. ஆனால், மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடக்கும், அதிகார நந்தி வீதியுலா இன்னும் சிறப்பு வாய்ந்தது.
1917ல்...: அதற்கு ஆதாரமாக காட்சியளிக்கிறது பிரமாண்ட வெள்ளி அதிகார நந்தி வாகனம். சென்னையில் பிற சிவாலயங்களில் உள்ள அதிகார நந்தி வாகனங்களை விட, மயிலையில் உள்ளது கண்ணைக் கவரும் வகையில் கலைநயம் மிக்கதாக விளங்குகிறது. அதன் ஒவ்வொரு பகுதியும், நுண்ணிய வேலைப்பாட்டுடன் மிளிர்கிறது அது, கடந்த 1917ம் ஆண்டுக்கு முன், மர வாகனமாகவே இருந்தது. கோவில் அருகே உள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில், அப்போது குடியிருந்த தண்டரை வைத்தியர் குடும்பத்தை சேர்ந்த, த.செ.குமாரசுவாமி என்பவர், இந்த மர வாகனத்திற்கு வெள்ளிக் கவசம் போர்த்தும் பணியை நிறைவேற்றினார். குமாரசுவாமியின் வம்சாவளியினரான முரளி மற்றும் அவரது குடும்பத்தினர், ஆண்டுதோறும், அதிகார நந்தி வாகனத்தை சுத்தப்படுத்துவதை செய்து வருகின்றனர்.
நான்கில் ஒரு பங்கு: இதுகுறித்து, முரளி கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு மேற்கில், 7 கி.மீ., தொலைவில் வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது, தண்டரை கிராமம். அது தான் எங்கள் பூர்விகம். வைத்தியத் தொழில் செய்து வந்தோம். பின், எங்கள் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. அதில் வைத்தியத்தோடு, இசையிலும் வல்லவராக திகழ்ந்தவர் தான் குமாரசுவாமி. என்னுடைய கொள்ளுத் தாத்தா. இங்கு, பொன்னம்பல வாத்தியார் தெருவில் தான் வசித்தார். வைத்தியத் தொழிலில் வந்த வருமானத்தில், நான்கில் ஒரு பங்கை ஒதுக்கி சேமித்து, 1917ல், 48,000 ரூபாய் செலவில், அதிகார நந்திக்கு வெள்ளிக் கவசம் செய்வித்தார். 98 ஆண்டுகள் ஆகிவிட்டது வெள்ளிக் கவசம் சாற்றி. இன்னும் அதன் கம்பீரமும், அழகும், மெருகும் குறையாமல் அப்படியே இருக்கிறது. பங்குனி பெருவிழாவில். மூன்றாவது நாள் காலை 6:00 மணிக்கு, அதிகார நந்தியில், கபாலீஸ்வரர் எழுந்தருள்வார். அதற்காக, அதிகார நந்தியின் வெள்ளிக் கவசத்தை, கொடியேற்ற நாளில் இருந்தே சுத்தம் செய்து, வீதியுலாவிற்கு தயார் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மயிலை தெப்பக் குளத்தில் படிக்கட்டுத் திருப்பணியிலும் குமாரசுவாமி ஈடுபட்டுள்ளதற்கான சான்று, அங்கு கல்வெட்டாக உள்ளது. புதுச்சேரி கந்தசுவாமி கோவில் மூலவருக்கு வெள்ளிக் கவசம், காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில், ஏலவார் குழலி அம்மைக்கு வைரத் தோடு ஆகியவற்றையும் அவர் செய்து கொடுத்துள்ளார். கோவிலுக்கு அம்மா உடன் தான் வருவேன். கோவிலுக்கு வருவது ரொம்ப பிடிக்கும். திருவிழா வந்துவிட்டாலே ஜாலி தான். திருவிழாவில் பொம்மை வாங்க பிடிக்கும்; ராட்டினத்தில் சுத்த பிடிக்கும். எல்லாத் திருவிழாவிற்கும் அம்மா என்னை அழைத்து வருவார். - சாய்சம்ருதி, 6, மயிலாப்பூர்
நான், முதியோர் இல்லத்தில் வசிக்கிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் கபாலீஸ்வரரை பார்க்க வந்து விடுவேன். இப்போது திருவிழா துவங்கி விட்டது, இனி தினமும் வருவேன். சேர்த்து வைத்த காசில், நர்த்தன வினாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பேன். - காந்திமதி, 74, அடையாறு.