மனம் ஒரு குரங்கு என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். மனம் நிலையாக இருக்காது. அடிக்கடி மாறியபடியே இருக்கும். அதனால் தான் எப்போதும் தாவுகிற குரங்குடன் அதனை ஒப்பிட்டுச் சொல்கிறார்கள். ஒரு காட்டில் உள்ள குரங்கு ஒன்று எப்போதும் எல்லா இடத்திலும் தைரியமாகத் திரியும். தன்னைவிடப் பெரிய குரங்குகளைக்கூட சமாளித்துவிடும். கொடிய விலங்குகள்கூட அதனை நெருங்க அஞ்சின. அவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருந்த அந்தக் குரங்கு ஒரு நாள், வழக்கம்போல் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருந்தது. பெரிய பாம்பு ஒன்றை கவனிக்காமல் மரத்தின் விழுது என்று நினைத்து இறுக்கமாகப் பிடித்துவிட்டது. குரங்கின் கையில் சிக்கிய பாம்பு சீறியது. விடுபடப் போராடி நெளிந்தது. கைப்பிடியை நழுவவிட்டால் அவ்வளவுதான், பாம்பு ஒரே போடாகப் போட்டுவிடும் என பயந்து மேலும் தன் பிடியை இறுக்கி இரு கைகளாலும் பிடித்தது.
பிடித்த பிடியை விடாமல் பாம்பைத் துõக்கிப் பிடித்தபடியே சென்றது குரங்கு. ஒரு நாள்.. இரண்டு நாள்.. என நாட்கணக்கில் உணவே உண்ணாமல் அலைந்தது. இந்த நிலையில் அந்தப் பாம்பு செத்தே போயிருந்தது. ஆனாலும் குரங்கு அதை விடவேயில்லை. தைரியம் இருந்த அதன் மனதில் இப்போது பயம் குடியேறியிருந்தது. அதனால் பாம்பைக் கீழே விடவே பயந்து உணவும் துõக்கமும் தொலைத்து இளைத்து மெலிந்தது. அதன் நிலைகண்ட வேறு குரங்குகள் உணவை ஊட்ட நெருங்கி வந்தன. ஆனால் அவையும் அதன் கையில் இருந்த பாம்பின் உடலைக் கண்டு பயந்ததால் ஓடிப்போயின. கொஞ்சநாளில் பட்டினி கிடந்தே அந்தக் குரங்கு இறந்துபோனது. அப்போதும் அதன் கைகள் பாம்பின் உடலைப் பிடித்தபடியே இருந்தன. அந்தக் குரங்கு கொஞ்சம் யோசித்திருந்தால், தான் பிடித்துவிட்ட பாம்பை வெகுதுõரத்துக்கு வீசி எறிந்துவிட்டுத் தப்பியிருக்க முடியும். அல்லது பாம்பு இறந்ததையாவது உணர்ந்து துõக்கிப் போட்டிருக்கலாம். ஆனால் தேவையில்லாத ஒன்றைத் தெரியாமல் பிடித்து விட்டதை உணராமல் அதையே சுமந்து திரிந்து தன்னையே தொலைத்துவிட்டது.
நம்முடைய மனமும் அப்படித்தான். என்னதான் மனம் தன்னம்பிக்கையோடு இருந்தாலும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் மனதில் பதிந்துவிடும் போது அவற்றை உதறித்தள்ள மனம் தயங்குகிறது. வேண்டியது எது வேண்டாதது எது என பிரித்துப் பார்க்கத் தெரிந்தும் குரங்கைப்போல் வேண்டாததை பிடித்துக் கொண்டு அதை விட மறுக்கிறோம். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று சொல்கிறார்கள்.