மானாமதுரை; தென் மாவட்டங்களில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடைபெறும் புரவி எடுப்பு திருவிழாவிற்காக மானாமதுரை பாரம்பரிய முறைப்படி களிமண்ணால் புரவிகள் செய்யப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தேனி,திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆனி,ஆடி போன்ற மாதங்களில் எல்லை மற்றும் காவல் தெய்வங்களுக்கு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் ஒற்றுமைக்காகவும்,உலக நன்மைக்காகவும் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.தற்போது தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் புரவி எடுப்பு திருவிழாவிற்காக கிராம மக்கள் மானாமதுரையில் உள்ள குலாலர் சமுதாயத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்களிடம் புரவிகள் செய்வதற்கு மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் புரவிகள்,மாடுகள்,சுவாமி உருவங்கள் உள்ளிட்டவற்றை தீவீரமாக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மண்பாண்ட தொழிலாளி முருகன் கூறியதாவது, கிராமங்களில் உள்ள எல்லை மற்றும் காவல் தெய்வங்களுக்கு வருடம் தோறும் புரவி எடுப்பு திருவிழாக்களை கிராம மக்கள் நடத்தி வருகின்றர். இத்திருவிழாவின் மூலம் கிராமங்களில் ஒற்றுமை நிலவி நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பதால் கிராம மக்கள் தொடர்ந்து திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் புரவி எடுப்பு திருவிழாவிற்காக ஏராளமான புரவிகள் செய்வதற்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.இதற்காக நாங்களும் பயபக்தியோடு விரதமிருந்து கலை நயத்தோடும், மிகுந்த தரத்தோடும் புரவிகளை தயார் செய்து கொடுத்து வருகிறோம் என்றனர்.