மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: பன்னிரண்டாம் நாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2015 11:05
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான மே, 2ல் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, ஒருநாள் அவரின் தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பசியால் வாடிய சம்பந்தருக்கு பார்வதியும், சிவனும் நேரில் தோன்றி பொற்கிண்ணத்தில் பாலூட்டி மறைந்தனர்.
இதனை அறியாத சிவபாத இருதயர், குழந்தையின் வாயில் பால் ஒட்டியிருந்ததைக் கண்டு, உனக்குப் பாலூட்டியது யார் ? எனக் கோபித்தார். அப்போது சம்பந்தர், தோடுடைய செவியன்.... என்னும் தேவாரப் பாடலைப் பாடி இறைவனை வழிபட்டார். அப்போது சிவன் உமையவளுடன் ரிஷபத்தில் தோன்றி அருள் புரிந்தார். அந்த பாக்கியத்தை நாமும் பெற சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். ஆறாம் திருவிழாவில் ரிஷப வாகனத்தை தரிசிக்காதவர்கள் மே, 2ல் தரிசிப்பது நல்லது. சித்திரை விழாவின் நிறைவு நாளில் தரிசித்தால் வாழ்வில் சகல சவுபாக்கியம் உண்டாகும்.