பதிவு செய்த நாள்
02
மே
2015
10:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான 1.5.2015 தேரோட்டம் நடந்தது. இத்திருவிழா ஏப்.,21ல் கொடி யேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,28ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,30ல் திருக்கல்யாணம் நடந்தது. தேரோட்டத்திற்காக உச்சிக் கால பூஜை வரை அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன.
புனிதப்படுத்துதல்: சித்திரை திருவிழாவிற்காக காப்பு கட்டிய பட்டர்கள் அதிகாலை 4 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்தனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்கவும், தேர்களை புனிதப்படுத்தவும் இப்பூஜை நடந்தது. சுவாமி தேர்: தேர்களை பாதுகாக்கும் தேரடி கருப்பு சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்து சுவாமியையும், அம்மனையும் தேர்களில் எழுந்தருள செய்தனர். சக்கரங்களுக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா... கோஷங்களுக்கு இடையே சுவாமி தேர் காலை 6.10 மணிக்கு புறப்பட்டது.
அம்மன் தேர்: ஆடி அசைந்து தெற்குமாசிவீதி - விளக்குத்தூண் சந்திப்பு அருகே வந்தது. பின், காலை 7.10 மணிக்கு அம்மன் தேர் புறப்பட்டது. மாசி வீதிகளில் வலம் வந்து மதியம் 12 மணிக்கும், 12.20 மணிக்கும் அடுத்தடுத்து நிலைக்கு வந்தன. அம்மனுக்கும், சுவாமிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த விலை மதிப்புடைய கற்கள் பதித்த நகைகள் அனைத்து விழாக்களிலும் அணிவிப்பது வழக்கம். தேரோட்டத்தின்போது மட்டும் அணிவிப்பதில்லை. தேர் ஆடி அசைந்து வரும்போது அதிர்வு காரணமாக கற்கள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் மதியம் 3 மணிக்கு கோயிலில் இருந்து கிரீடம், தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்பட்டது.
சப்பரத்தில் காட்சி: கடந்த 10 நாட்களாக இருவரும் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவும், தேர் சென்ற வழியில் அதன் தடம் பார்க்கவும் 1.5.2015 இரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் இருவரும் உலா வந்தனர். கோயிலுக்கு திரும்பிய பின் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று பொற்றாமரைக்குளத்தில் தேவேந்திர பூஜையுடன் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.