பதிவு செய்த நாள்
02
மே
2015
12:05
பெங்களூரு: மங்களூரு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பரிகார தலமாக, குக்கே சுப்ரமண்யர் கோவில் உள்ளது. இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், புண்ணிய நதிகளான குமாரதாரா, தர்பணா நதிகளில் நீராடி, இறைவனை தரிசிப்பர். ஆனால், இந்த நதிகளில் உள்ள குறைந்த அளவு தண்ணீரும், குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை. பக்தர்கள் வீசியெறியும் துணிகள், குடிநீர் பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகள் நதிகளின் தண்ணீரை மேலும் அசுத்தமாக்குகிறது. எனவே, தண்ணீர் கறுப்பு நிறமாக மாறியுள்ளது.
இதனால், இந்த புண்ணிய நதிகளில் குளிக்க, பக்தர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அண்மையில், இங்கு வந்த கலெக்டர் இப்ராஹிம், குமாரதாரா நதியை பார்வையிட்டு, கடும் அதிருப்தி தெரிவித்தார். குக்கே சுப்ரமண்யர் கோவில் நிர்வாக அதிகாரி பசவராஜ் கூறுகையில், புண்ணிய தலத்தின் இரு நதிகளிலும் தண்ணீர் பாய்ந்து வரும் அளவு குறைந்துள்ளதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மழை பெய்து, நதிகளில் அடைத்து கிடக்கும் கழிவுகள், தண்ணீரில் அடித்து சென்றால் மட்டுமே, தண்ணீர் சுத்தமாகும், என்றார்.