பதிவு செய்த நாள்
06
மே
2015
01:05
மதுரை: நரசிம்ம அவதாரத் திருநாளான மே 3ம் தேதி மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் லெக்ஷ்மி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையொட்டி ஒன்பது கலசங்களில் இருந்து விசேஷ தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு பூஜிக்கப்பட்டன. மாலை 6 மணியளவில் பால், பழம் உள்ளிட்ட பஞ்சகவ்யம், பஞ்சாமிர்த்ம், பன்னீர், இளநீர் மற்றும் பழரசங்கள் போன்ற பல வகையான அபிஷேகங்கள் வலம்புரி சங்கால் நடைபெற்றது. தொடர்ந்து பலவண்ணப்பூக்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது.
பின்னர், பூரண கும்ப ஆரத்தியுடன் மஹா ஆரத்தியும் நடைபெற்றது. மேலும் நரசிம்ம அவதாரத்தின் முக்கியத்துவம் பற்றிய சிறப்புரையும் நடந்தது. இதில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நரசிம்மராக அவதரித்து, தான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன் என்பதை நிரூபித்தார். மேலும் பகவானின் பக்தர்கள் என்றும் அழிவதில்லை என்றும் காட்டினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், எல்லா உயிர்வாழிகளுக்கும் உற்ற நண்பராகவும், பாதுகவலராகவும் இருக்கிறார். அவர் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. ஆனால் தன்னையே நம்பி வழிபடும் தனது பக்தர்களின் மீது, மிக அதிக பிரியம் கொண்டவராகிறார். அதுவும் குறிப்பாக இந்த நரசிம்ம அவதாரத்தில், பக்த பிரகாலதர் தன் மீது கொண்ட பக்திக்காக, நரசிம்ம அவதாரம் எடுத்தார். இது பக்தர்கள் மீது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைத்திருக்கும் அளவு கடந்த பிரியத்தை காட்டுகிறது. நரசிம்மரை வழிபடும் வரும் எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றப்படுவார். எனவே தான் நரசிம்மர், விக்ன வினாசா என்றும் போற்றப்படுகிறார். அதாவது, விக்னங்களை விலக்குபவர் என்று அறியப்படுகிறார் என்று உரை வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக, பங்கேற்ற அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்திருந்தது.