பதிவு செய்த நாள்
29
ஏப்
2026
07:04
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.,19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. இரவு சுந்தரேஸ்வரர் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் பவனி வந்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று வெகு விமரிசையாக துவங்கியது. மீனாட்சி ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை மற்றொரு தேரிலும், மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்காக இரு தேர்களிலும் 1732.14 கிலோ எடையில் திருச்சி ‘பெல்’ நிறுவனம் மூலம் கோயில் நிதி ரூ.35 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட புதிய இரும்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வழக்கு நம் மண்ணில் காலம் காலமாக வழங்கி வருகிறது. சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடைபெறும். ஒற்றுமையை வலியுறுத்தும் இவ்விழா நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது. நாட்டை ஆளும் மன்னன் நகரை வலம் வருவது போல, இவ்வுலகையே ஆளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர்பவனி நடைபெற்று வந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. 16ம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டியுள்ளார். இப்போது பவனி வரும் தேர்கள் இரண்டும் ராணிமங்கம்மாளின் பேரனான விஜயரெங்கசொக்கநாத நாயக்கரால் (1706-1732) செய்யப்பட்டவை. இரண்டு தேர்களிலும் சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. சுவாமியும், அம்மனும் தேரில் பவனி வரும் போது ஆபரணம் ஏதும் அணிவதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டியி ருப்பர். தேர் பவனி முடிந்த பின் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சியம்மனுக்கும் கிரீடம், ஆபரணங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். காலையில் தேரில் பவனி வரும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் இரவில் சப்தாவர்ண சப்பரத்தில் பவனி வருவர். ருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தி வந்தனர். சிவபெருமான் தேரேறிப் புறப்பட்டு அவர்களை வதம் செய்து உலகைக் காத்து அருளினார். இப்புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மாசிவீதிகளில் பவனி வருகின்றனர்.