பதிவு செய்த நாள்
26
மே
2015
11:05
கோவை: வேசுக்கோ, தீசுக்கோ எனும், கோஷம் முழங்க, பக்தர்கள், கத்தியால் உடலைக்கீறி, ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை ரங்கேகவுடர் வீதியில் பழமை வாய்ந்த, ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையொட்டி, கோபூஜை மற்றும் அஸ்வ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அஸ்வ பூஜையில், அலங்கரிக்கப்பட்ட அம்மனை, தங்கக் கலசத்தில் வைத்து, நான்கு குதிரைகளில் வீதி உலாவாக அழைத்து வருவது வழக்கம். நேற்று குதிரை மீது அம்மன் பவனி வந்தபோது, அம்மனை வரவழைக்க, போற்றி துதித்த, பக்தர்கள், தங்களது உடலில் கத்தியால் குத்தி, நேர்த்திக்கடனை செலுத்தினர். சாய்பாபாகாலனி அழகேசன் ரோட்டிலிருந்து புறப்பட்ட கத்திபோடும் ஊர்வலம், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, கிராஸ்கட்ரோடு, பூமார்க்கெட் வழியாக ரங்கேகவுடர் வீதியிலுள்ள ராமலிங்கசவுடாம்பிகை அம்மன் கோவிலை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் தமிழகம் முழுக்க இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ‘வேசுக்கோ, தீசுக்கோ கோஷத்தை எழுப்பி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கத்தி ஊர்வலத்தையொட்டி, கோவை மாநகர போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் கூறுகையில்,‘12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், ம்பாபிஷேகத்தையொட்டி, கத்திபோடும் ஊர்வலம் நடத்தப்படும். அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால், கோவை நகரம் செழிக்கும், மக்களின் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும் என்றனர்.