திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் மே 23ல் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தினமும் இரவு வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் திருவீதி வலம் வந்தனர்.நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு சுவாமி,அம்பாள், விநாயகர் மூன்று தேர்களில் எழுந்தருளினர்.தொடர்ந்து தேரில் எழுந்தருளிய, ஐம்பெரும் கடவுளர்களையும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழி பட்டனர். மாலை 4.10 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வெள்ளை வீசி, பக்தர்கள் தேர் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது.இன்று காலை 10.30 மணிக்கு திருத்தளி தெப்பக்குள மண்டபத்திற்கு சுவாமி-அம்பாள் எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நடைபெறும்.