பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
11:06
பள்ளிப்பட்டு: வடகுப்பம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று நடந்தது. காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளிப்பட்டு அடுத்த, வடகுப்பம் கிராமத்தின் கிழக்கு பகுதியில், திரவுபதியம்மன் கோவில்
உள்ளது. இந்த கோவிலில், கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன், அக்னி வசந்த உற்சவம்
துவங்கியது. தினசரி மதியம், மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு தெருக்கூத்து
நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று காலை 11:00 மணிக்கு, பதினெட்டாம் போர்க்கள நிகழ்வு நடந்தது. இதில், துரியோதனனை, பீமசேனன் வீழ்த்தினான். இந்த நிகழ்வை, தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தினர். படுகளம் நிகழ்ச்சியை காண, வடகுப்பம், சாமிநாயுடு கண்டிகை, கோணசமுத்திரம், கர்லம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பகுதிவாசிகள் வந்திருந்தனர். காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு இருந்த பக்தர்கள், மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் எழுப்பப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று, தர்மர்பட்டாபிஷேகம் நடக்கிறது.