நமது வீட்டில் குழந்தைகள் சேஷ்டை செய்தால், அவர்களை சமாதானப்படுத்த பொம்மை வாங்கித் தருவதாகவும், சாக்லெட் வாங்கித் தருவதாகவும் சொல்லி சமாதானம் செய்வோம். அப்படி ஏதேனும் வாக்கு கொடுத்தால், அதை கண்டிப்பாக வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். விளையாட்டுக்கு கூட பொய் சொல்லக்கூடாது என்பது அவரது ஆணித்தரமான கொள்கையாக இருந்தது. ஒருமுறை, நபிகள் நாயகம் அவர்களின் திருஇல்லத்திற்கு அமீர் என்பவர் வந்தார். அவரை அவரது தாய் அழைத்தார். மகனே, இங்கே வா, உனக்கு சாப்பிட பண்டம் தருகிறேன், என்றார். நாயகம்(ஸல்) அவர்கள் அந்த அம்மையாரை அழைத்து, உங்கள் மகனுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்? எனக் கேட்டார். நாயகம் அவர்களே! நான் சில பேரீச்சம்பழங்களை கொடுக்கப் போகிறேன், என்றார் அந்தத்தாய். அம்மா! நீங்கள் அவருக்கு கொடுப்பதாக சொன்னதை நிச்சயமாக கொடுத்து விடுங்கள். அவ்வாறு கொடுக்காமல் இருந்தால், உங்களது கணக்கில் ஒரு பொய் எழுதப்பட்டு விடும், என்றார்கள். உங்கள் குழந்தைகளை சமாதானப்படுத்த இனிமேலும் ஏதேனும் பொய் வாக்கு கொடுக்காதீர்கள்.