காரைக்கால்: உலக நன்மை வேண்டிய திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு மகா யாகம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் குருபகவான் ராசி மண்டல குருவாக அருள்பாலித்து வருகிறார். குரு பகவான் இரவு 11.04க்கு கடக ராசியிலிருந்து,சிம்ம ராசிக்கு நேற்று பெயர்ச்சி அடைந்தார். குரு பெயர்ச்சியொட்டி உலக நன்மை வேண்டி இக்கோவிலில் 12ம் ஆண்டு மகா யாகம் நேற்று நடந்தது.யாகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்ஞை மற்றும் விக்னேஷ்வர பூஜை நடந்தது.நேற்று காலை 8 மணிக்கு துவங்கி 11 மணிவரை குருபெயர்ச்சி மகா யாகம் நடந்தது. இதில் கடக ராசி முதல் சிம்ம ராசி வரையிலும், அஸ்வதி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை உள்ள 27 நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் நன்மை பெற பிரார்த்தனை நடந்தது. பின் மகா பூர்ணாஹூதி, தீபாரதனையும் அதைத்தொடர்ந்து குரு பகவானுக்கு 30 திரவங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனை நடந்தது. யாகத்தை அகில இந்திய ஆசிசைவ சிவாச்சாரியர் சேவா சங்க துணை தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியர் தலைமையில் கோவில் குருக்கள் ராஜா மற்றும் குமார் குருக்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை பூந்தோட்டம் ராசிமண்டல குருபகவான் நற்பனி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.