அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2015 05:07
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்தலத்தில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். அம்மாவாசை தோறும் இங்கு மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்புவாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆணி மாத அம்மாவாசையான இன்று காலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருளசெய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 1மணிக்கு தண்டபாணி குருக்கள் யா கத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்திவைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். அம்மாவாசையை முன்னிட்டு கும்பகோணத்தில் இருந்து அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆடி மாத அம்மாவாசையான ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி அன்று நிகும்பலா யாகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.