பதிவு செய்த நாள்
05
ஆக
2015
12:08
திருச்சி: ஸ்ரீரங்கத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, திடீரென வந்த மாஜி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு, 9 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று ரங்கநாதரை தரிசனம் செய்தார். பின்னர், நம்பெருமாளை தரிசனம் செய்வதற்காக காத்திருந்தார். நேற்று முன்தினம், ஆடிப்பெருக்கு பண்டிகை என்பதால், காவிரி தாய்க்கு சீர் வரிசை கொடுப்பதற்காக நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அங்கிருந்து இரவு, 8 மணிக்கு புறப்பட்டு, 9 மணிக்குள் கோவிலுக்கு வர வேண்டும். ஆனால், திடீரென பலத்த மழை பெய்ததால், ஒரு மணி நேரம் தாமதமாக, 9 மணிக்கு புறப்பட்டு, 9.35 மணியளவில் நம்பெருமாள் கோவிலை வந்தடைந்தார். அங்கு காத்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நம்பெருமாளை தரிசனம் செய்து விட்டு புறப்பட்டுச் சென்றார். கரூரில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, செல்லும் வழியில் அவர் திடீரென ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்துள்ளார். முன்னறிவிப்பு இன்றி திடீரென வந்ததால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது அரசு தலைமை கொறடா மனோகரன் மற்றும் அ.தி.மு.க.,வினர் உடனிருந்தனர்.