பதிவு செய்த நாள்
27
ஆக
2015
01:08
திருச்சி: திருச்சியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு, சிலைகள் தயாரிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. செப்டம்பர், 17ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு, சிலை தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. திருச்சி, கொள்ளிடம் டோல்கேட் பகுதியில், விநாயகர் சிலை தயாரிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு, சிம்ம வாகனத்தில் அமர்ந்த விநாயகர், மாடு, சிம்ம வாகனத்துடன் கூடிய விநாயகர், சிம்ம வாகனத்தில் அமர்ந்து அசுரனை வதம் செய்யும் விநாயகர், கமல விநாயகர், நரசிம்மர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய மூன்று தலைகளுடன் கூடிய விநாயகர் சிலைகள், இரண்டு அடி முதல், 18 அடி உயரம் வரையிலான சிலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். தவிர, களிமண் கொண்டு, அச்சில் வார்க்கப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, விநாயகர் சிலை உற்பத்தியில் ஈடுபடும் ஜெய்சங்கர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்த விழா கொண்டாட்டத்துக்கு சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். நாமக்கல், தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் வந்து சிலைகளை வாங்கிச் செல்வர். அசுர விநாயகர், நரசிம்மர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய மூன்று தலைகளுடன் கூடிய விநாயகர் சிலை புதிதாக தயாரித்து உள்ளோம். இரண்டு அடி உயர சிலை, 2,000 ரூபாயும், 15 அடி உயர சிலை, 18 ஆயிரம் ரூபாய். தவிர, களிமண் விநாயகர் சிலைகள், 15 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது. பண்டிகைக்கு, 10 நாட்கள் உள்ள போதே, சிலை ஆர்டர் வரக்கூடும். மூலப்பொருட்களின் விலை உயர்வால், சிலைகளின் விலை, ஐந்து சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.