சிறியூர் மாரியம்மன் கோவிலில் மகா பூ குண்டம் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2026 10:03
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூக்கல் எட்டூர் சார்பில் நடைபெறும் இவ்விழா, 2ம் தேதி பூச்சாட்டு நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து, 3ம் தேதி கம்பம் நாட்டு விழா நடந்தது. கடந்த, 4ம் தேதி முதல், 7ம் தேதிவரை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, 8ம் தேதி காலை, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி இடம் பெற்றது. திருவிழாவின் ஒரு நிகழ்வாக, 9ம் தேதி பகல், 1:00 மணிக்கு பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பகல், 3:00 மணிக்கு, ஸ்ரீ மாசி கரியபண்ட அய்யனின் அழைப்பு நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, கூக்கல் திருவள்ளுவர் கலா மன்றத்தாரின் நள சக்கரவர்த்தி என்ற சரித்திர இதிகாச நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, ஜாகிரை தேர் (நவதானிய பூஜை) சிறப்பாக நடந்தது. முக்கிய திருவிழாவான நேற்று காலை, 7:00 மணிக்கு மகா பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில், நீலகிரி மாவட்டம் உட்பட சமவெளி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் தரிசனம் செய்துள்ளனர். விழா ஏற்பாடுகளை, எட்டூர் கிராம பிரமுகர்கள் மற்றும் கோவில் கமட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஒன்பது மணி நேரம் தாமதம்; சிறியூரில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக, வாழை தோட்டம் - சிறியூர் இடையே சாலை அமைக்கும் பணி நடந்தது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் இருந்த நிலையில், கடந்த அமாவாசை பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, திருவிழாவை ஒட்டி, சாலை பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு வாகனம் செல்லும் அளவுக்கு, தார்சாலை போடப்பட்ட நிலையில், சாலையின் இருப்புறங்களிலும் அதித துாரத்துக்கு மண் நிரப்பப்படவில்லை இதனால், எதிரில் வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலையில், இரவு நேரத்தில் அணிவருத்து நின்றன. மாலை, 4:30 மணிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்சில் பயணித்த பயணிகள், இரவு, 1:30 மணிக்கு, ஒன்பது மணி நேரம் தாமத்திற்கு பிறகு சிறியூரை அடைந்தனர். இதனால், அனைவரும் சோர்வடைந்தனர்.