கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை புனித இஞ்ஞாசியர் ஆலய தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டையில், 82 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புனித இஞ்ஞாசியர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை நவநாள் திருப்பலி மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது பூக்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர், ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை, காந்தி ரோடு போன்ற முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய விழாக்குழுவினர் செய்திருந்தனர்.