புதுச்சேரி: வாணரபேட்டையில், பட்டப்பகலில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாணரப்பேட்டை அலென் வீதியில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. நேற்று மதியம் ராகுகால பூஜைக்காக கோவில் திறந்திருந்து. ஆட்கள் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கோவில் உள்ளே வந்த மர்ம நபர்கள், குண்டோதரன் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயரமுள்ள உண்டியலை அலேக்காக துாக்கி சென்று, தஷ்ணாமூர்த்தி சிலை அருகில் வைத்து பூட்டை உடைத்து, பணத்தை திருடி கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருட்டு குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.