பழநியில் வன்னிகாசூரன் வதம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2015 10:10
பழநி: பழநியில் விஜயதசமியை முன்னிட்டு மலைக்கோயிலிலிருந்து பராசக்திவேல் புறப்பாடாகி, வன்னிகாசூரன் வதம் நடந்தது.பழநியில் நவராத்திரி விழா அக்.,13 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமி விழாவையொட்டி பழநி மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும், சாயரட்சை பூஜை முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு நடந்தது. அதன்பின் மலைக்கோயில் சன்னதி நடை சாத்தப்பட்டது. வன்னிகாசூரன் வதம் நிகழ்ச்சிக்காக பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோயிலிலிருந்து பராசக்திவேல், படிப்பாதை வழியாக கீழே பாதவிநாயகர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வரவேற்றனர்.அங்கிருந்து ஊர்வலமாக பெரியநாயகியம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். பின், கருடவாகனத்தில் லட்சுமி நாராயணப்பெருமாளும், தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமியும் பராசக்திவேல், கேடயம், வில், அம்புடன் கோதை மங்கலத்திற்கு புறப்பட்டனர்.அங்கு இரவு 8 மணிக்குமேல் கோதையீஸ்வரர் ஆலயம்முன் வாழைமரம் மற்றும் வன்னிமரத்தில் அம்பு எய்து வன்னிகாசூரன் வதம் நடந்தது. முத்துகுமாரசுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக்கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கு வந்த பின் நள்ளிரவில் அர்த்தசாம பூஜை நடந்தது.