பதிவு செய்த நாள்
02
நவ
2015
10:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, மாகரல் கிராமத்தில் உள்ள திருமலை பகவான் கோவிலில் இருந்த பெருமாள் மற்றும் தாயார் சுவாமிகளின் ஐம்பொன் சிலைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேல்... காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்டது, மாகரல் கிராமம். இந்த கிராமத்திலிருந்து காவாந்தண்டலம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ளது, கௌசலாம்பிகை தாயார் சமேத திருமலை பகவான் கோவில். நுாறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த இக்கோவிலை, மாகரல் கிராமத்தில் உள்ள திருமலை ஐயங்கார் என்பவர் பராமரித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, பூஜைகளை முடித்து வீடு திரும்பிய திருமலை ஐயங்கார், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, கோவிலை திறக்க சென்றுள்ளார். அப்போது, கோவிலின் முன்பக்க கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் கருவறையில் இருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட, 2 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் தாயார் சுவாமிகளின் உற்சவ சிலைகள், திருடுபோனது தெரியவந்தது. 20 வகையான பொருட்கள் சுவாமி சிலைகளுடன், கோவிலிலிருந்த குத்துவிளக்கு, சடாரி, பஞ்சபாத்திரம், செப்பு தோண்டி, தவளை உள்ளிட்ட, 20 வகையான பொருட்களும் திருடு போனது. இதுகுறித்து திருமலை ஐயங்கார், மாகரல் போ லீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த போலீசார், சம்பவஇடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து நேற்று வழக்குப்பதிந்த மாகரல் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.