சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூரம் உற்சவத் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2015 10:11
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூரம் உற்சவத் தேரோட்டம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகங்கை குளத்திற்கு எதிரில் திருக்காமக் கோட்டம் சன்னதியில் எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூரம் உற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜை, தீபராதனைகள் நடக்கிறது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. ஐப்பசி பூரம் உற்சவத்தையொட்டி நேற்று சிவகாமசுந்தரி அம்மன் திருத்தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மன் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். இன்று (6ம் தேதி) மாலை வாங்கும் உற்சவம் மற்றும் பூர சலங்கை உற்சவம் நடக்கிறது. நாளை (7ம் தேதி) காலை தபசு உற்சவம், இரவு சிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை சபாநாயகர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.