பதிவு செய்த நாள்
23
நவ
2015
11:11
நாமக்கல் : நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று புனிதரை வணங்கினர். நாமக்கல்-திருச்சி சாலையில், கிறிஸ்து அரசர் ஆலயத்தில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா, கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை, நவநாள் திருப்பலி, திருச்செங்கோடு மறைமாவட்ட முதன்மை குரு பிரான்சிஸ் ஆசைத்தம்பி, இறையரசு தியான மைய இயக்குனர் விஜய் அமல்ராஜ் ஆகியோர் தலைமையில், நடந்தது.நேற்று கிறிஸ்து அரசர் பெருவிழா கோலாகலமாக நடந்தது. காலை, 8.30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில், திருநாள் திருப்பலி, மாலை, 6 மணிக்கு, சிறப்பு திருப்பலியும் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை, 6.30 மணிக்கு, கிறிஸ்து அரசர் தேர்பவனி நடந்தது.அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த அரசர், பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். நகரின் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் புனிதரை வணங்கினர். அதையடுத்து, இரவு, 9.30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பங்குத்தந்தைகள் பிரான்சிஸ், ஆரோக்கிய டேவிட், பங்கு மக்கள் செய்திருந்தனர்.