பதிவு செய்த நாள்
27
நவ
2015
12:11
சாம்ராஜ்நகர்: மலை மகாதேஸ்வரா கோவிலுக்கு காணிக்கையாக கிடைக்கும், பசுக்கள், கன்றுகளை கோவில் நிர்வாகம், அடிமாட்டுக்கு விற்பனை செய்வதால், பக்தர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலை மகாதேஸ்வரா மலைக்கோவிலுக்கு, பக்தர் கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறினால், பசுக்கள், கன்றுகளை தானமாக வழங்குவது வழக்கம்.
வாரியம் அமைப்பு: இந்த பசுக்களில் இருந்து கிடைக்கும் பால், சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படும் என்ற நோக்கத்தில், அவற்றை பக்தர்கள் தானமாக வழங்குகின்றனர். ஒவ்வொரு மாதமும், 80 – 100 பசுக்கள், கன்றுகள் பக்தர்களிடமிருந்து, கோவிலுக்கு காணிக்கையாக வருகிறது. இவ்வாறு கோவிலுக்கு கிடைக்கும் பசுக்கள், கன்றுகளை பராமரிக்க, கோவில் நிர்வாகம் எந்த வசதியும் செய்யவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், இக்கோவில், அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது. பின், கோவில் நிர்வாகத்தை கவனிக்க, தனி வாரியம் அமைக்கப்பட்டது. அறநிலையத்துறையை பின்பற்றி, கோவிலுக்கு தானமாக கிடைக்கும் மாடுகளை, வாரியமும் ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகிறது.
சில காலங்களுக்கு முன், கோவிலில் பசுக்களின் எண்ணிக்கை அதிகமானால், சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, பசுக்கள் தானமாக வழங்கப்படும். நாளடைவில் கோவிலுக்கு வரும் பசுக்கள் கடவுளுக்கு சொந்தமானது என்பதால், பசுக்களை வாங்க மறுத்தனர். அதற்கு பின்னரே, 1960 முதல், பசுக்கள் ஏலம் விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு: ஏலத்தில் வாங்கப்படும் பசுக்கள், கன்றுகள், தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அடிமாட்டுக்காக கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, பசுக்கள், கன்றுகளை அடிமாட்டுக்கு கோவில் ஊழியர்கள் விற்கின்றனர் என்று கோபமடைந்த பக்தர்கள், கடந்த, 21ம் தேதி கோவில் முன் போராட்டம் நடத்தினர். மலை மகாதேஸ்வரா கோவிலுக்கு, காணிக்கையாக கிடைக்கும், பசுக்கள், கன்றுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.