பதிவு செய்த நாள்
28
நவ
2015
11:11
சென்னை:மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. மயிலாப்பூரின் பழமையான, ராகு-கேது தோஷம் நீக்கும் தலம், காலையில் தொடங்கி மதியம் வரை தொடர்ந்து அபிஷேகம் காணும் அம்மன் ஆலயம் என, பல்வேறு சிறப்புகள் கொண்ட முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து, நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 50 லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக ஏற்பாடுகள் துவங்கின. அதையடுத்து, நேற்று மாலை முதற்கால யாக பூஜைகள் துவங்கின. இன்று காலை இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற உள்ளன.இதனையடுத்து, நாளை காலை 5.30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்ததும், மகாபூர்ணாஹூதி முடிந்து, காலை, 8.30 மணியளவில் முண்டகக்கண்ணி அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அன்று இரவு அம்மன் வீதியுலா நடைபெறும்.
விரைவில் கோலவிழி அம்மனுக்கு...: கோலவிழி அம்மன் கோவிலில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி ஆய்வு செய்தார்.அதன் பின் அவர் கூறியதாவது:கபாலீஸ்வரர் கோவிலின் இணை கோவிலான, கோலவிழி அம்மன் கோவில் திருப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. புதிய பிரகார மண்டபம் கட்டும் பணி நிறைவடையும் தறுவாயில் உள்ளது. நந்தவனம் அமைத்தல், பொங்கல் வைக்கும் மேடை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும், கருவறை பாலாலயம் செய்யப்பட்டு, விரைவில் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும். பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.