பதிவு செய்த நாள்
25
டிச
2015
12:12
எதற்காக வந்தார் இயேசு
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கிறது. அவரவர் தங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்கின்றனர். நெப்போலியனின் வாழ்வில் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள்.இந்த மாவீரன் தனது வீரர்களை ஒரு கிராமத்துக்கு அனுப்பிவைத்தான். அந்த கிராமத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும், இருட்டுவதற்குள் வெற்றிச் செய்தியை தன்னிடம் சொல்ல வரவேண்டும் என்றும், தான் ஒரு குன்றில் காத்திருப்பதாகவும் சொல்லி அனுப்பினான். வீரர்களும் அவன் குறிப்பிட்ட கிராமத்திற்கு சென்று எதிரிகளுடன் போரிட்டு வென்றனர்.நேரம் இருட்டியது. ஒரு குதிரை வீரன் வேகமாக ஓடிவந்து நெப்போலியனை வணங்கி, ""அரசரே! போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று பெருமிதமாக கூறினான்.அடுத்த வினாடியே அவனது வாயிலிருந்து ரத்தம் புரண்டு வந்தது. அவன் தன்னைத் தாக்கிய குண்டினால் ஏற்பட்ட காயத்தையும் தாங்கிக்கொண்டு, இருட்டுவதற்குள் தனக்கு வெற்றித் தகவலைச் சொல்ல வேண்டும் என்ற அரசனின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக விரைந்து வந்திருந்தான். தனக்கு கொடுக்கப்பட்ட உத்தரவை
நிறைவேற்றியதில் அவனுக்கு பரம திருப்தி. அந்த திருப்தியோடு அவன் உயிரையும் விட்டான்.இயேசு கிறிஸ்துவும் இதே போன்ற இலக்குடன் பூமிக்கு வந்தார். இவ்வுலக மக்கள் அனைவரும் செய்த எல்லா பாவங்களையும் ஏற்பது என்பதே அவரது இலக்கு. அந்த இலக்கை அவர் முழுமையாக எட்டினார். பாவமில்லாத பூமியை உருவாக்கிவிட்டு பிதாவிடம் திரும்பினார். அவரைப் போல ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த லட்சியத்திற்காக எவ்வளவு பெரிய சிரமம் வந்தாலும் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும்.
குழந்தை இயேசுவை காண வந்தவர்கள்: இயேசுகிறிஸ்து பெத்லகேமில் பிறந்ததும் சாஸ்திரிகள் பலர் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஏலாம் என்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த நாடு தான் தற்போதைய பெர்சியா. பைபிளில் குறிப்பிடப்படும் நோவா என்பவரின் மகன் சேம். இவரது மகன் ஏலாம். இவரது பெயரே இந்த நாட்டுக்கு சூட்டப்பட்டது. இந்த நாட்டிலிருந்து வந்த சாஸ்திரிகள் வான சாஸ்திரம், மருத்துவம், விஞ்ஞானத்தில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர்.
கிறிஸ்துமஸ் டிட்பிட்ஸ்
* கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல் முதன் முதலில் 1843ல் புழக்கத்திற்கு வந்தது.
* முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்தை அனுப்பியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹார்ஸ்லே. தன் நண்பர் சர்.ஹென்றிகோலுக்கு அனுப்பினார்.
* கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிடும் வழக்கத்தை உருவாக்கியவர் பிஷப் செயின்ட் நிக்கோலஸ்.
* 1722ல் கிறிஸ்துமஸ் குடிலை, புனிதர் பிரான்சிஸ் அறிமுகப்படுத்தி வைத்தார்.
* கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது கி.பி.,154ல். போப் ஜூலியஸ் இதை அறிவித்தார்.
* முதல் கிறிஸ்துமஸ் மரம், 1841ல் இங்கிலாந்தில் அல்பொட் என்ற மன்னரால் வின்ட்ஸர் கோட்டையில் நடந்த குழந்தைகள் கிறிஸ்துமஸ் விழாவில்
அறிமுகம் செய்யப்பட்டது.
* "இயேசு என்பதற்கு "விடுதலையாக்குபவர் என்றும், "கிறிஸ்து என்பதற்கு "தீர்க்கதரிசி என்றும் அர்த்தம்.
மாட்டுக்கொட்டிலில் பிறந்தஇன்னொரு குழந்தைஇயேசு கிறிஸ்து மாட்டுக் கொட்டிலில் பிறந்தது நம் எல்லாருக்கும் தெரியும். புனிதர் ஒருவரும்
மாட்டுக்கொட்டிலில் பிறந்த கதை தெரியுமா!இத்தாலியைச் சேர்ந்த பட்டு வியாபாரி ஒருவர் தன் குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றிருந்தார். கர்ப்பவதியான அவரது மனைவிக்கு பிரசவ வலி வந்து விட்டது. அவர் வேதனையில் துடித்தார். குழந்தை பிறக்கிற வழியாகக் காணோம்.
அப்போது, ஒரு பெரியவர், ""நீங்கள் இந்தப் பெண்ணை ஒரு மாட்டுக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். குழந்தை பிறந்து விடும், என்றார். அதன்படியே அந்த அம்மையாரை மாட்டுக்
கொட்டிலுக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை யார் தெரியுமா? புனித பிரான்சிஸ் அசிசியார்.
டெசம் என்றால் என்ன?
டிசம்பர் என்ற சொல் "டெசம் என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்தது. இந்த மாதத்தில் தான் இயேசு அவதரித்தார். "டெசம் என்பதையே இந்தியாவில் "தசம் என்கிறோம். "தசம் என்றால் பத்து. அந்தக் காலத்தில் மார்ச் முதல் மாதமாகவும், டிசம்பர் பத்தாவது மாதமாகவும் இருந்தது. இந்த அடிப்படையிலேயே இந்த மாதத்திற்கு பெயர் அமைந்தது. காலண்டர் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட காலங்களில் டிசம்பருக்கு 29 நாட்களே இருந்தது. ஜூலியஸ் சீசர் தான் இதை 31 நாட்களாகத் திருத்தினார். ஜெர்மனியில் டிசம்பரை "கிறிஸ்துமஸ் மாதம் என்கின்றனர்.
இந்த பரிசையும் பயன்படுத்தியவர்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கவிஞருக்கு அவரின் நண்பர் வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றை அனுப்பினார். அதுதான் சவப்பெட்டி. இப்படி அனுப்பியதற்காக அந்த நண்பர் வருத்தப்படவில்லை. அதனுள் படுத்துக் கொண்டே கவிதை எழுதலாமே! எப்படி படுத்தால் எழுத வசதியாக இருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார். பொதுவாக பணமாகவோ, பொருளாகவோ, பத்திரிகைகளுக்கு சந்தாவாகவோ கிறிஸ்துமஸ் பரிசு அளிப்பது வழக்கம். இது மிகவும் வித்தியாசமான பரிசாக அந்த கவிஞருக்கு அமைந்தது. இந்த செய்தியை ஒரு பத்திரிகை வெளியிட்டது. ஆனால், கவிஞரின் பெயரையும், பரிசளித்தவரின் பெயரையும் வெளியிடவில்லை.