மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) +நிமிர்ந்து நிற்பீர்கள் - உறவில் மனக்கசப்பு! (100/60)
பதிவு செய்த நாள்
29
டிச 2015 02:12
எல்லாரையும் அனுசரித்து செல்லும் மகர ராசி அன்பர்களே!
உங்கள் ஆட்சி நாயகன் சனி பகவான் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது. எனவே இந்த ஆண்டு சிறப்பாக அமையும். உங்கள் நிலை நிமிர்ந்தே இருக்கும். குருபகவான் ஆண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான கன்னி ராசியில் உள்ளார். இது மிகச்சிறப்பான இடம். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இது தவிர அவரது 9-ம் இடத்துப் பார்வை மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் தற்போது 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும்,ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். ராகு, கேது மட்டும் சாதகமாக இல்லாததால் அரசு வகையிலும், பொருட்கள் காணாமல் போதல் உள்ளிட்ட சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலனை காணலாம். எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். புதிய வாகனங்கள் வாங்கலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். பிப். 7 முதல் ஆக. 1 வரை குரு வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் வசதிகள் இருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும். ஆனால் பிப். முதல் ஜூலை வரை திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தடை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம்.
தொழில், வியாபாரம்: மார்ச் 28முதல் ஜூலை 14 வரை சுமாரான வருமானமே கிடைக்கும். அதன்பின் லாபம் கூடும். சேமிப்பு அதிகரிக்கும்.அலைச்சல், வெளியூர் வாசம் இருக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய தொழில் அனுகூலத்தைத் தரும். வேலை இன்றி இருப்பவர்கள் சுயதொழில் துவங்க ஏற்ற ஆண்டு இது.
பணியாளர்கள்: கோரிக்கைகள் நிறைவேறும். பிப். முதல் ஜூலை வரை வேலைப்பளு கூடும். அதன்பிறகு வேலையில் முன்னேற்றம் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவும், விரும்பிய இடத்திற்கு மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் முக்கிய பதவியைப் பிடிப்பர். படித்து விட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்
கலைஞர்கள்: பிப். முதல் ஜூலை வரை ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். பிறகு பிரச்னையின்றி புதிய ஒப்பந்தங்களை பெறலாம். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு குறையாது.
அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டை விலகும்.
மாணவர்கள்: சீரான பலனை காணலாம். உழைப்புக்கு ஏற்ற வெற்றியும், மதிப்பெண்களும் கிடைக்கும். ஆனால் பிப். முதல் ஜூலை வரை அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்கள் சொல்படி நடப்பது நல்லது.
விவசாயம்: உழைப்பிற்கு ஏற்ற பலனை காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். ஜூலை வரை நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்களில் ஆண்டின் பிற்பகுதியில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
பெண்கள்: பணவரவில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ராகுவால் நகை திருட்டு போக வாய்ப்பு உண்டு. கவனம். உடல் நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.
பரிகாரம்: ராகு காலத்தில் கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்து சன்னியாசிகளுக்கு உதவி செய்யுங்கள்.
செல்ல வேண்டிய கோவில்: திருநாகேஸ்வரம் நாகநாதர் (ராகு) கோவில்.
|