இன்னும் 8 நாளில்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2016 11:01
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாகும்பாபிஷேகம் ஜன. 20 ல் நடப்பதை ஒட்டி இந்த சிறப்பு பகுதி வெளியாகிறது.
ராமராஜ்யம் மீண்டும் மலரட்டும்: தசரதர் மக்களை நோக்கி கேட்டார். மக்களே! நான் பதவியில் இருந்து ஓய்வு பெறலாம் என இருக்கிறேன். என் மகன் ராமனுக்கு பட்டம் சூட்ட முடிவு செய்துள்ளேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக் கேட்டார். இதற்கு முன் ராமனின் இஷவாகு குலத்தில் இருந்த எல்லா ராஜாக்களுமே மக்களிடம் இப்படி கேட்டிருக்கிறார்கள். அதற்கு மக்கள் சரி... செய்யுங்கள்! என்று மட்டுமே பதில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அயோத்தி மக்கள், மகாராஜா! நீங்கள் சொல்வதை ஏற்கிறோம். ராமனுக்கு முடி சூட்டுங்கள். அவர் பட்டத்து யானையில் ஏறி பவனி வரும் அழகைக் காண நாங்கள் காத்து இருக்கிறோம் என்று சொன்னதோடு விடவில்லை. தசரதரே அதிர்ச்சியடையும் படியாக, தங்களுக்கு அறுபது ஆயிரம் வயதாகி விட்டது. உடனே பதவியை விட்டு இறங்குங்கள் என்றும் சேர்த்து சொன்னார்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத தசரதர் மக்களை நோக்கி நான் பதவி விலகும் அளவுக்கு என்னிடம் அப்படி என்ன குறை கண்டீர்கள்? என்று கேட்டார்.
உடனே மக்கள், உங்களிடம் குறை ஏதும் காணவில்லை ஆனால் உத்த குணங்கள் கொண்ட ஒருவர் எங்களை ஆட்சி செய்ய வேண்டும். அதற்காகவே அவசரப்படுகிறோம் என்றனர். தசரதர் மகிழ்ந்தார். தன் மகன் ராமன் தாடகையை அழித்தது. பரசுராமரை ஜெயித்தது, வில்லை ஒடித்து சீதையைக் கைப்பிடித்தது ஆகிய செயல்களெல்லாம் செய்து தனக்கு பெருமை சேர்த்ததை விட, ஊர்மக்கள் தன் மகனை உத்தமன் என்று உயர்த்தி சொன்னதைக் கேட்டு பரமானந்தம் கொண்டார். நீயே ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும். உன்னால் தான் நாங்கள் உயர முடியும் என்று மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அது ராமனை மட்டுமே அந்த உத்தமரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும். அதற்காக ராமேஸ்வரம் சென்று அந்த ராமபிரானையும் ராமநாதரையும் வேண்டி வருவோம்.