பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைப்பூசத் திருவிழா (ஜன.,15) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம், ஜனவரி, 23ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில், சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்த பெற்ற கோவிலாகும். வெளிநாடு, மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நாள்தோறும் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு தைப்பூசத் திருவிழா, ஜனவரி, 15ம் தேதி துவங்கியது. இத்திருவிழா பதினோறு நாட்கள் நடைபெற உள்ளது. (ஜன.,15) காலை, 7.30 மணிக்கு மகர லக்னத்தில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, 8 மணிக்கு தைப்பூசக்
கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து, மாரியம்மன் மரக்கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண் டனர்.தைப்பூசத் திருவிழாவில் தொடர்ந்து தினமும் அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், வெள்ளி மற்றும் சேஷ வாகனம் மற்றும் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஜனவரி, 23ம் தேதி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவமும், ஜனவரி, 24ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து, சீர் பெறும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளன. இதற்கான விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் தென்னரசு, மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.