பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
கோல்கட்டா: ஜப்பான் மக்கள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்குகின்றனர், என,
வரலாற்று ஆசிரியர், பினாய் கே. பெஹல் தெரிவித்துள்ளார்.அவர், கோல்கட்டாவில் உள்ள
இந்திய அருங்காட்சியகத்தில், ஜப்பானில் இந்து கடவுள் வழிபாடு தொடர்பான புகைப்படங்களை காட்சிக்கு வைத்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:ஜப்பானுக்கும், இந்தியாவிற்கும், இந்து மதம், இந்து கடவுள் வழிபாடுகளில் தொடர்பு உள்ளது. ஜப்பானில், சரஸ்வதி கடவுளுக்கு மட்டும் நுாற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. டோக்கியோ கோவில் ஒன்றில், வீணை மீட்டும்
சரஸ்வதி சிலை உள்ளது. ஒசாகாவில், உலகிலேயே மிகப் பெரிய சரஸ்வதி சிலை
அமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற புனித நதிகள் உள்ளன.
அதுபோல, ஜப்பானியர்கள், நீர்நிலைகள், குளங்கள் ஆகியவற்றை, சரஸ்வதி கடவுளாக பாவித்து வணங்குகிறார்கள். அங்கு, சரஸ்வதியின் பெயர், பென்ஸைடன்; பிள்ளையாருக்கு, ஷோட்டன் என, பெயர். கருட பகவானை, கருரா என, அழைக்கின்றனர்.இந்தியர்கள் மறந்து விட்ட வாயு, வருணன் உள்ளிட்ட கடவுள்களுக்கு கூட, ஜப்பானில் சிலைகள் உள்ளன.
ஜப்பானியர், 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சித்தம் என்ற சமஸ்கிருத நுாலை பாதுகாத்து வருகின்றனர். டோக்கியோவில் உள்ள கோகோகுஜி கல்லறைகளில், சமஸ்கிருத எழுத்துக்கள்
பொறிக்கப்பட்டுள்ளன.இறந்தோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவற்றை அழிக்காமல் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் காணாமல் போன, சித்தம் நுால், ஜப்பானில் உள்ளது. கோயாசன் நகரில், சித்தமுடன், சமஸ்கிருதம் கற்றுத் தரும் பள்ளியும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.