பதிவு செய்த நாள்
18
ஜன
2016
12:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், திம்மசமுத்திரம் செல்லும் பார்வேட்டை உற்சவம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் செல்லும் பார்வேட்டை உற்சவம் நடைபெறும். அதன்படி, நேற்று காலை 8:45 மணியளவில், கோவிலில் இருந்து ஏலவார்குழலி அம்பாளுடன், ஏகாம்பரநாதர், நாதஸ்வரம், கோலாட்டம், கட்டை கூத்து, பம்பை, கைசிலம்பாட்டம், கரகாட்டம் புலியாட்டம், தாரை, தப்பட்டை முழங்க, புறப்பட்டு சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் சென்றனர்.நேற்று மதியம் 2:00 மணியளவில், திம்மசமுத்திரம் கோவிலை சென்றடைந்தார். மாலை 3:00 மணியளவில், ஏகாம்பரநாதர் ஏலவார்குழலிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை முடிந்து, இரவு 9:00 மணியளவில், திம்மசமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 12:00 மணியளவில், கோவிலை வந்தடைந்தார்.
மாமல்லபுரம்: 108 வைணவ தலங்களில் ஒன்றான, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், காணும் பொங்கல் தினமான நேற்று, பார்வேட்டை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, உற்சவர் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி, காலை, 4:00 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டார். பூஞ்சேரி; பெருமாளேரி; வடகடம்பாடி; நல்லான்பிள்ளை பெற்றாள்; காரணை; குச்சிக்காடு ஆகிய கிராமங்கள் வழியே சுவாமி ஊர்வலமாக சென்று, குழிப்பாந்தண்டலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலை அடைந்தார். இரவு, வீதியுலா சென்றவர், இன்று, அதிகாலை மாமல்லபுரம் கோவிலை அடைந்தார்.