புதுச்சேரியில் புகழ் பெற்ற திருத்தலங்களில் வில்லியனுார் திருக்காஞ்சியில் அமைந்துள்ள காமாட்சி, மீனாட்சி உடனுறை கெங்கவராக நதீஸ்வரர் கோவில், மிகவும் பழமையானது. ’காசியை விட வீசம் அதிகம்’ எனும் சிறப்பு பெற்றது. கோவிலில் 16 பட்டைகள் கொண்ட சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தில் 16 லட்சுமியும் வாசம் செய்வதால் இத்தலத்தை வழிபடுவோருக்கு பதினாறு பேறும் கிடைக்கும் என்பது ஐதீகம். அகத்தியர் தனது திருக்கரத்தில் இறைவனை ஏந்தி பூஜித்த திருத்தலமாகும். அகத்தியர் பூஜைக்காக புனித நீர் வேண்டும் என பிரார்தனை செய்ததின் பலனாக சிவபெருமான், ஆணைப்படி வராக பெருமான் தனது கொம்பினால் கீரீயதால் செஞ்சியில் உற்பத்தியாகிய ஆறு தெற்கு பகுதியை நோக்கி பாய்ந்து புதுச்சேரி அருகே கிழக்காக திரும்பி கடலில் கலக்கிறது. இதனால் செஞ்சியாறு, கிளிஞ்சியாறு என்றும், இந்த நதி, வராகர் அருளால் ஏற்பட்டதால் வராகநதி என்றும் சங்கரனின் ஆபரணமாக கங்கை திகழ்வதாலும், சங்காராபரணி என்றும் பெயர் பெற்ற புனித தீர்த்தமாக விலங்குகிறது.
அந்தணன் கொண்டு சென்ற அஸ்தி, இத்தலத்தை அடைந்த போது புஷ்பமாக மாறியதும். இத்தலத்தின் எல்லையை கடந்ததும் மீண்டும் அஸ்தியாக மாறியதை கண்டு வியந்தார். அப்போது ஏற்பட்ட அசரீரி ’காசியைவிட வீசம் அதிகம்’ என்று ஒலித்தது. இதனால் அந்தணன் கொண்டு வந்த அஸ்தியை இந்த ஆற்றிலேயே கரைத்தார். அன்று முதல் இத்திருத்தல ஆற்று பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் திதி கொடுத்து வருவது வழக்கமாக உள்ளது. மாசி மாதம் மக நட்சத்திரத்தில் சுவாமி தீர்த்தவாரி நடக்கும். அன்றைய தினம் இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர். இத்தைய சிறப்பு மிக்க இந்த திருக்காஞ்சி கோவில் கும்பாபிஷேகம் நாளை (20ம் தேதி) காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் நடக்கிறது.