வடலுார்: தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு வடலுார் பகுதியில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வரும் 24ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு வள்ளலார் கொள்கை நெறிபரப்பு இயக்கம் சார்பில் கலெக்டர் சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர். அதில் வடலுார் ஞானசபையில் வரும் 23ம் தேதி கொடியேற்றம், 24ம் தேதி ஜோதி தரிசனம், 25ம் தேதி கருங்குழியில் இசை விழா, 26ம் தேதி மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது. இந்த நான்கு நாட்களிலும் மாமிச கடைகள், இறைச்சி வெட்டும் இடங்கள், புலால் உணவு விடுதிகள் மூடி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனையேற்று கலெக்டர் சுரேஷ்குமார், வடலுார் பகுதியில் நாளை 23ம் தேதி முதல் வரும் 26ம் தேதிவரை இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.