அறநிலையத்துறையின் கீழ்வரும் நிலக்கோட்டை மாரியம்மன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2016 12:02
நிலக்கோட்டை: நிலக்கோட்டை மாரியம்மன் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் நிலம், உண்டியல், ஈடு வருமானம் ஆகியவற்றை தற்போதைய நிர்வாகி சுசீந்திரன், கோயில் கணக்கில் வரவு வைக்காமல், நாடார் உறவின்முறை கணக்கில் வரவு வைத்து கோயிலுக்கு வருவாய் இழப்பீடு செய்துள்ளார். இதற்காகவும் பிற காரணங்களுக்காகவும் தற்காலிக தக்காராக செயல் அலுவலர் சுதாவை நியமித்து அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் இணை ஆணையர் உத்தரவை செயல்படுத்த ஆணையுடன் கோயிலுக்குச் சென்ற செயல் அலுவலர் சுதா பொறுப்பேற்பதற்காக, நிர்வாகி சுசீந்திரனை தேடினார். செயல் அலுவலர் வருவதை அறிந்து, நிர்வாகி சுசீந்திரன் வெளியூர் சென்று விட்டார். நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் நிலக்கோட்டை போலீசாரின் அறிவுரைப்படி அறநிலையத்துறையினர் கோயிலை பூட்டினர். நேற்று தாசில்தார் காளிமுத்து தலைமையில், டி.எஸ்.பி., சுருளியாண்டி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் கோயிலில் முன்பு போல் பூஜைகள் நடத்தவும், அறநிலையத்துறையினர் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ளவும் தீர்மானித்து நாடார் உறவின் முறை நிர்வாகிகள், அறநிலையத்துறையினர் கையொப்பம் இட்டனர்.