அகோபிலமடம் நரசிம்ம ஆராதனைக்கு பெயர் பெற்றது. இங்கு நாற்பதாவது ஜீயராக இருந்தவர் ரங்கநாத சடகோப யதீந்திர தேசிகர். காரைக்குறிச்சி அழகியசிங்கர் என்று இவரைக்குறிப்பிடுவர். இவர் நரசிம்ம உபாசனையில் தீவிரமாக இருந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் தேவாதிராஜபெருமாளோடு பேசுவது போல, அகோபிலத்திலுள்ள மாலோல நரசிம்மனோடு பேசும் அளவுக்கு பக்தியில் சிறந்து விளங்கினார். ஒருமுறை, அகோபில மடத்து யானைக்கு மதம் பிடித்தது. அனைவரும் பயந்து அங்குமிங்கும் ஓடத்துவங்கினர். ஆனால், ஜீயர் தன் கையில் திரிதண்டத்துடன் யானையை நோக்கி நடந்தார். நரசிம்மரின் திருமஞ்சன (அபிஷேகம்) தீர்த்தத்தை அதன் மீது தெளித்தார். யானை ஸ்தம்பித்து நின்றுவிட்டது. பின்னங்கால் இரண்டையும் மடக்கிக் கொண்டு துதிக்கையைத்தூக்கி நரசிம்ஹா என்று மூன்றுமுறை கத்தியது.என்னடா உனக்கு ஆச்சு! என்று அன்போடு தடவிக் கொடுத்து பெருமாள் தீர்த்தத்தை வாயில் கொடுத்தார். தீர்த்த மகிமையால் யானை ஒரு நொடியில் சாந்தமாகி விட்டது.