வடமதுரை: அய்யலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை ஏராளமான பக்தர்கள், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். தற்போது 27ம் ஆண்டாக இதற்காக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், குருசாமி பிச்சை தலைமையில் அய்யலூர் களர்பட்டியில் ஒன்று கூடினர். கிராம கோயில்களான விநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், கருப்பண்ணசாமி, ராமபிரான் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அய்யலூர் அன்னை ஆதிபராதி மாரியம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேருடன், ஏற்கனவே காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் 5000 பேருடன், உறவினர்கள், நண்பர்கள் என 8000த்திற்கும் மேற்பட்டோர் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர்.