பதிவு செய்த நாள்
23
பிப்
2016
12:02
திருமூர்த்திமலை: அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, நேற்றுமுன்தினம் மாலை, விக்னேஸ்வர வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று காலை, விநாயகர் வழிபாடும், மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு ஹோமமும் நடந்தது; இன்று காலை, 8:30 மணிக்கு,ஹோமம், தீபாராதனையும், மாலை, 5:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, தீபாராதனையும் நடக்கிறது.
சப்த கன்னிகள்அமணலிங்கேஸ்வரர் சன்னதியின் கன்னி மூலையில், தோணி நதியின் கரையில், சப்த கன்னியர்களான அபிராமி, மகேசுவரி, கவுமாரி, காளி, வாராகி, அயிரானி, இந்திராணி ஆகியோரின் திருவுருவங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, சுத்தவெளியில் ஒரு சிறிய பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சூட்சமமாக விளங்கும் குன்றைச் சுற்றி வலம் வரும்போது, சப்த கன்னியர் காட்சியளிக்கின்றனர். பெண்கள் தம் திருமாங்கல்யம் நிலைபெற இத்தேவியரை, மஞ்சள் சாத்தி மனதார வழிபடுகின்றனர்.
சப்த கன்னியர் குறித்த புராணச் செய்தி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், கஞ்சிமலையில் (திருமூர்த்திமலை) அமைந்திருந்த, அத்தரி முனிவர், அனுசுயா தேவியின் ஆசிரமத்துக்கு செல்லும் வழியில், அந்த மலையின் சிகரத்தின் மீது குதித்தனர். மூவரும் சிகரத்தின் மீது குதித்ததும், மலையின் அதிதெய்வமானது, மும்மூர்த்திகளின் திருவடிபட்டதால், அந்தப்புண்ணிய ஸ்பரிசத்தால், உடல் பூரித்து, உரோமமும் சிலிர்த்து எதிர் நின்று துதி செய்து நிற்க, மும்மூர்த்திகளும் ஏறி நின்ற குன்றின் சிகரம், பிளந்து பெயர்ந்தது. தன் மீது குதித்து நின்ற மூவர்களோடு, பிளவு பட்ட சிகரம் தோணி நதிக்கரையில் உருண்டு வந்தது. அப்போது, அந்நதியில் நீராடிக்கொண்டிருந்த சப்த கன்னிகள், மும்மூர்த்திகளுடன் சிகரம் உருண்டு வருவதை கண்டு, இதுவும் மும்மூர்த்திகளின் திருவிளையாடல் தானோ, என, எண்ணி தாங்கள் குளிப்பதற்காக, அரைத்து வைத்திருந்த மஞ்சள் உருண்டைகளை, உருண்டு வந்த சிகரம் பெயர்ந்து செல்லாத வகையில், தடையாக வைத்தனர். அந்த வினாடியே மஞ்சள் உருண்டையின் தடைக்கு, குன்று மேலும் நகராமல், கன்னியர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு அப்படியே நின்றது. சப்த கன்னியர்களுக்கு அருள் செய்த மும்மூர்த்திகளும், அக்குன்றில் இன்றும் சீவர்களுக்கு தரிசனம் தருகின்றனர்; வேண்டிய வரங்களை நிறைவேற்றி வைக்கின்றனர்.
நவக்கிரக சன்னதி: பக்தர்கள் நவக்கிரக நாயகர்களை வழிபட்டு, நவகிரக தோஷங்கள் நீங்க பெற்று நலமடையும் வகையில், அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நவகிரகங்களின் சன்னதியும் அமைந்துள்ளது. நவக்கிரக நாயகர்களை வழிபட, பூஜைக்கு தேவையான எள் மற்றும் நவதானிய பொட்டலங்கள் கோவில் வளாகத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது.