தெய்வங்கள், அவர்களது அருளை நமக்குப் பல வழிகளில் அளித்துக் காப்பாற்றுகிறார்கள். அவற்றில் ஒரு வழியே கடவுள் படங்கள் மற்றும் திருவுருவங்கள். பொதுவாக, சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியாக இருப்பின் அவரை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ வைக்கலாம். எனினும், சிவலிங்கத் திருமேனியின் கோமுகி வடக்கு நோக்கியே அமைய வேண்டும். நடராஜப் பெருமான், ஷண்முகர், பிரத்யங்கிரா போன்ற தெய்வங்களை தெற்கு நோக்கி அமையுமாறு வைக்கலாம். பொதுவாக சாத்வீகமான தெய்வங்கள் அனைத்தும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்குமாறு வைக்கலாம். எனினும், இக்காலத்தில் அவரவர் வசிக்கும் வீடுகளின் அளவுகளைப் பொறுத்தும், அங்கு பூஜை அறைக்கு உரிய இடத்தின் அளவைப் பொறுத்தும், அங்கு இடம்பெறக்கூடிய தேவதைகளைப் பொறுத்தும் இடங்களையும் திசைகளையும் தீர்மானித்துக் கொள்ளலாம்.