பதிவு செய்த நாள்
25
பிப்
2016
11:02
மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி 48 நாள் புத்துணர்வு முகாம் முடிந்து, நேற்று புதுச்சேரி திரும்பியது. தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றின் கரையில் யானைகள் முகாம் நடந்தது. இம்முகாமில் பங்கேற்க புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, ஜனவரி 7ம் தேதி சிறப்பு பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 31 யானைகள் பங்கேற்றன. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப, மருந்து கலந்த உணவுகளும், பாதப்பிரச்னையுடைய யானைகளுக்கு பாதக் குளியல் சிகிச்சையும் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் 48 நாட்கள் நடந்த முகாம், நேற்று முன்தினம் 23 ம் தேதி நிறைவடைந்தது. அங்கிருந்து வாகனம் மூலம் அழைத்து வரப்பட்ட யானை லட்சுமிக்கு, தலைமைச் செயலகம் அருகே நேற்று காலை, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பிரகாரத்தின் உள்ளே சுற்றி வந்த லட்சுமியிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் கூறுகையில், புத்துணர்வு முகாமில் யானை லட்சுமி சிறப்பாக பராமரிக்கப்பட்டது. தற்போது உற்சாகத்துடன் காணப்படுகிறது. ஓராண்டுக்கு தேவையான மருந்துகள், மூலிகைகள் லட்சுமிக்கு தரப்பட்டுள்ளன. தமிழக வனத்துறையினர். அறநிலையத் துறையினர் சிறப்பாக முகாமை ஏற்பாடு செய்திருந்தனர் என்றார். யானை பாகன் சக்திவேல் கூறுகையில், முகாமில் பிற யானைகளுடன் லட்சுமி தோழமையுடன் பழகியது. நிறைவு விழா முடிந்த வாகனத்தில் ஏற மறுத்தது. பழநி கோவில் யானையை முதலில் வாகனத்தில் ஏற்றிய பின்னர், லட்சுமி ஏறியது. ஆண்டுதோறும் முகாம் நடத்தினால் நன்றாக இருக்கும். தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.