புனேவிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ள கேட்காவாலே எனும் இடத்தில் ஒரு வேங்கடாசலபதி கோயில் கட்டியிருக்கிறார்கள். வேங்கடேஸ்வரா ஹேச்சரீஸ் நிறுவனத்தின் மேற்பார்வையில் உருவான இந்தக் கோயில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருமலை திருப்பதி போலவே, தென்னாட்டுச் சிற்பக்கலை பளிச்சிடும்படி கோயில் அமைந்திருக்கிறது. லட்டு பிரசாதமும் உண்டு! இங்கு நிறைய மராட்டி மக்கள்தாம் தரிசனத்துக்கு வருகிறார்கள். தென்னிந்திய மக்களுக்கு இன்னும் இப்படி ஒரு கோயில் இருப்பது தெரியவில்லை என்பது காரணமாக இருக்கலாம்! வேங்கடாசலபதியைத் தரிசிக்கும் முன், அழகான ஒரு பிள்ளையார் கோயிலை தரிசிக்கலாம். புனேவுக்குத் திரும்பி வருகிற வழியில், தத்தாத்ரேயர் கோயில் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தாண்டி வந்தால் நாராயணேஸ்வரர் கோயிலில் போய் லிங்கத்தைத் தரிசிக்கலாம். பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். புனே-மும்பை பாதையில் குன்றின் மேல் உள்ள ஒரு முருகன் கோயிலைக் காணலாம். இங்கு அம்பாள், அனுமன் பாலாஜி சன்னதிகளும் இருக்கின்றன. தனியே சாயிபாபா சன்னதியும் உண்டு.