பதிவு செய்த நாள்
20
ஏப்
2016
12:04
செஞ்சி:மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் திருத்தேர் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, மேல்சித்தாமூரில் தமிழக ஜெயினர்களின் தலைலம பீடமான ஜினகாஞ்சி ஜெயின் மடமும், பழமைவாய்ந்த பார்சுவநாதர் கோவிலும் அமைந்துள்ளது. பார்சுவநாதருக்கு ஆண்டுதோறும் மகாவீரர் ஜெயந்தியன்று திருத்தேர் உற்சவம் நடத்துகின்றனர். இந்த ஆண்டு திருத்தேர் உற்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பார்சுவ நாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலையில் சாமி வீதி உலா நடந்தது. நேற்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 1008 பார்சுவநாதருக்கு திருத்தேர் உற்சவம் நடந்தது. காலை 8:30 மணிக்கு பார்சுவநாதரை தேரில் ஏற்றி, வடம் பிடித்தனர். மேல்சித்தாமூர் மடாதிபதி லட்சுமி சேன மகா சுவாமிகள், திருமலை தவளகீர்த்தி மகா சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். மயிலம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரை, கூட்டுறவு சங்க தலைவர்கள் ரங்கநாதன், விநாயகமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் பரிமளா பன்னீர் செல்வம், ஊராட்சி தலைவர் முருகேசன் மற்றும் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் வடம் பிடித்தனர். செஞ்சி இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.