தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறையில் உள்ளது தவளவெண்ணகை அம்பாள் உடனருளும் பாலைவனநாத சுவாமி திருக்கோயில். இது திருநாவுக்கரசு சுவாமிகளால் பாடல்பெற்ற தலம். உலகப் புகழ்பெற்ற அதிசிய செங்கல் நெற்களஞ்சியம் உள்ள கோயில். நமசிவாய என்ற மந்திரத்தின் நடுவிலுள்ள சிவ என்ற மந்திரத்துக்குரிய சிவலிங்கம் உள்ள கோயில். பிராகாரத்தில், சுமார் இரண்டடி உயரமுள்ள குழந்தைவடிவ சண்முகர் மயில்மேல் அமர்ந்து காட்சிதருகிறார். முன்புறம் மூன்று, பின்புறம் மூன்று என ஆறு திருமுகங்கள். பன்னிரு திருக்கரங்களில் 12 விதமான ஆயுதங்கள் உள்ளன. அருகில் வள்ளி, தெய்வானையும் எழுந்தருளியுள்ளனர். குழந்தை வடிவ ஆறுமுகனை இங்கு மட்டுமே தரிசிக்கமுடியும். இந்த ஆறுமுகன் சந்நிதியை ஒட்டியுள்ள முன்மண்டபத்தின் மேலே நான்கு புறமும் முருகனின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், போர் செய்தல் போன்ற சிற்பங்கள் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூறுக்கணக்கான சிற்பங்கள்! திருமுகாற்றுப்படை பரிபாடல் போன்றவற்றில் வரும் முருகனின் வரலாறுகளை இந்தச் சிற்பங்களில் காணமுடியும். வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சி!