பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
12:07
கோத்தகிரி: கோத்தகிரி குமரன் காலனி அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை ஆற்றங்கரையில் இருந்து மேளதாளத்துடன், அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி, பாண்டியன் பூங்காவில் இருந்து, பால்குடங்கள், காவடிகளுடன் அலகு குத்தி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, பதினாறு வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம், பாலாபிஷேகம், அலங்கார பூஜையை அடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அம்மன் அலங்கார தேரில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு, நல் வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்கார பூஜை, 10:00 மணிக்கு, மாவிளங்கு பூஜையை தொடர்ந்து, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பகல், 2:00 மணிக்கு, அம்மன் ஆற்றங்கரையில் திருவிடையாற்றி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை ஒட்டி, வீர விளையாட்டு, சிறுவர் மற்றும் மகளிருக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.