பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
11:07
வத்திராயிருப்பு: சதுரகிரி ஆடி அமாவாசை விழாவிற்கு சிறப்பு பஸ்கள் வந்து செல்ல, தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்காக மலையடிவாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், 2 கி.மீ., தூரத்தில் உள்ளதால் பக்தர்கள் சிரமமடையும் நிலை உள்ளது. தற்காலிக பஸ் ஸ்டாண்ட்: சதுரகிரி மலை அடிவாரத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பால் பஸ்கள் சென்று வருவதற்கு கூட இடமின்றி நெரிசல் ஏற்பட்டது. அடிவாரத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்ட தற்காலிக பஸ் ஸ்டாண்டும் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை.
கடந்த ஆண்டு அடிவாரத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்திற்கு அப்பால் இருந்த தனியார் வயலில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டது. தற்போது அந்த இடமும் விவசாயம் செய்யப்பட்டு வருவதால், ஒரு மாதமாக அதிகாரிகள் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு இடம் தேடி அலைந்தனர். சில நாட்களுக்கு முன் தனியார் சிலர் இடம் தர முன்வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். மதுரை துணை கமிஷனர் ராஜராஜன், விருதுநகர் கலெக்டர் (பொறுப்பு) முத்துக்குமரன், உதவி எஸ்.பி., மாடசாமி, ஸ்ரீவி., டி.எஸ்.பி., சங்கரேஸ்வரன் உட்பட இருமாவட்ட அதிகாரிகள் குழுவினர் இடத்தை பார்வையிட்டனர்.
18 கி.மீ., நடை: அதிகாரிகள் தேர்வு செய்த இந்த இடம் மலை அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து 2 கி.மீ., தூரத்திற்கு மேல் <உள்ளது. குடும்பத்துடன் வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் உடமைகளுடன் அதிக தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிவாரத்திலிருந்து கோயில் வரை 9 கி.மீ., மலை ஏறவும், இறங்குவதற்கு 9 கி.மீ., என 18 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. பஸ் ஏறுவதற்காக மேலும் 2 கி.மீ., நடக்க வேண்டி உள்ளதால், பக்தர்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய இடத்திலிருந்து அடிவாரம் வரை செல்ல ஆட்டோ, மினிபஸ் வசதிகளை ஏற்படுத்தினால் மட்டுமே இந்த சிரமங்களிலிருந்து பக்தர்கள் தப்ப இயலும். விழா துவங்க இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளதால் அதிகாரிகள் தற்போதே அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.