பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
11:07
திருத்தணி: முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா ஒட்டி, தேவஸ்தான டிக்கெட் கட்டணமும் மூன்று மடங்கு உயர்த்தியும், மொட்டை அடிக்க, 50 ரூபாய் கட்டாய வசூலால் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்தி ருவிழா, கடந்த 26ம் தேதி முதல் துவங்கியது. இன்று மூன்று நாள் தெப்பத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இந்த விழவில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். இதில், பெரும்பாலான பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி மொட்டை அடித்தனர்.
மூன்று மடங்கு...: முருகன் கோவில் தேவஸ்தான முடிக்காணிக்கை மண்டபங்களில், வழக்கமாக, பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு, கடந்த பத்து நாட்களுக்கு முன் வரை, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆடிக்கிருத்திகை விழா என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடிக்க வந்ததால், தேவஸ்தான டிக்கெட்டுகள், 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப் பட்டது. இதுதவிர மொட்டை அடிக்கும் செல்லும் இடத்தில், தனியாக, 50 ரூபாய் கொடுத்தால் தான், மொட்டை அடிப்பேன், ஊழியர்கள் அடாவடி வசூல் செய்தனர். முதலில் பணம் வாங்கிக் கொண்டு தான், மொட்டை அடிப்பதற்கே ஊழியர்கள் துவங்குகின்றனர். இதனால், பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, அவ்வப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி வரை நடந்தது. அருகில் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். இதை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் தேவஸ்தான ஊழியர்களும் கண்டும், காணாமல் இருந்தனர்.
கழிப்பறை வசதி இல்லை: மலைக்கோவிலில், ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்ததால், நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்பட்டனர். அதே போல் போதுமான குடிநீர் வசதியும் மலைக்கோவிலில் செய்துதரவில்லை.
தனியார் தொண்டு : நிறுவனம் வழங்கிய குடிநீரால் தான், பக்தர்கள் ஓரளவுக்கு தாகத்தை தீர்த்துக் கொண்டனர். மலைக்கோவிலில், இரு நாட்களாக வெயில் கொளுத்தியதால், பக்தர்கள் நடப்பதற்கு கடும் சிரமப்பட்டனர். கோவில் நிர்வாகம் ஆங்காங்கே பந்தலே மற்றும் ‘மேட்’ அமைத்திருந்தால், பக்தர்கள் சிரமப்பட வேண்டிய அவசியம்
இருந்திருக்காது. இதனால் குழந்தை, வயதான பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
துர்நாற்றம்: மூன்று நாட்களாக நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில், இரண்டு லட்சத்திற்கும், மேற்பட்ட பக்தர்கள் காவடி களுடன் வந்து சரவணப் பொய்கையில் புனித நீராடினர். அப்போது காவடிகளில், பக்தர்கள் அணிந்திருந்த பூ மாலைகளை குளத்தில் வீசினர். அந்த பூ மாலைகளை ஒப்பந்த ஊழியர்கள் எடுத்து குளக்கரையில் போட்டனர். அந்த குப்பை அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. அதே போல், நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் தெப்பத்திருவிழாவின் போது, குளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தன. இறந்த மீன்களை அகற்றும் பணியில் ஒ ப்பந்த ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் குளத்தில் புனித நீராட கடும் சிரமப் பட்டனர்.