பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
சூளை: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சூளை அங்காளம்மன் கோவிலில், நேற்று காலை நடந்த சிறப்பு யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை, சூளை அங்காளம்மன் கோவில் தெருவில், அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில், குரு பகவான், தட்சிணாமூர்த்தி, நவகிரகத்திற்கு தனி சன்னிதிகள் உள்ளன. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் நேற்று காலை 7:00 மணிக்கு குரு பெயர்ச்சி யாகம், அதனை தொடர்ந்து குருமங்கல யாகம், நவகிரக சாந்தி யாகம், அஷ்டலஷ்மி, குபேர யாகம் ஆகிய யாகங்கள் நடைபெற்றன. யாகபூஜைகள் முடிந்த பின், காலை, 10:00 மணிக்கு குருபெயர்ச்சி தரிசனம், மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. குரு பெயர்ச்சியன்று பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிதாரர்கள் சங்கல்பம் செய்து, பரிகார பூஜை செய்து கொண்டனர். ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நாளில் வந்ததால், குரு பகவானை தரிசிக்க வந்தவர்கள் மட்டுமின்றி, அம்மன் தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.