பதிவு செய்த நாள்
11
ஆக
2016
11:08
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி துவங்கியுள்ளது. காரைக்கால், திருநள்ளாரில், தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு, உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவது வழக்கம். தங்கத் தேர், அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு காணிக்கை அளிக்க, சனீஸ்வர பகவான் கோவிலில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதில், அன்னதான உண்டியல் நிரம்பியது. தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. காணிக்கையை எண்ணும் பணி, கோவில் ஊழியர்கள் உதவியுடன் துவங்கியது.