பதிவு செய்த நாள்
18
ஆக
2016
12:08
ராமநாதபுரம்,:மண்டபம் மறவர் தெரு ஆதி முத்துமாரியம்மன், டி.நகர் மாரியம்மன், உடைச்சியார் வலசை சந்தனமாரியம்மன், வழுதுார் மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா ஆக., 9ல் முத்து பரப்புதல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. ஆக., 16 மாலை அம்மன் கரகம் கண்மாய், குளம், கடற்கரைகளில் இருந்து எடுத்து கோயில் வந்தடைந்தது. நேற்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடு பலியிட்டு அருள்வாக்கு கேட்கப்பட்டது. மாலையில் இளைஞர்களின் ஒயிலாட்டத்திற்கு பிறகு முளைப்பாரி சுமந்து பெண்கள் கரகத்துடன் ஊர்வலம் சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள், இளைஞர் மன்றத்தினர் செய்தனர். ஆக., 23ல் குளுமை பொங்கல் விழா நடக்கிறது.