பதிவு செய்த நாள்
01
செப்
2016
11:09
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத் திருவிழா நேற்று காலை 6:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 4ஆம் திருநாளான செப்., 3ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருள்வர். பஞ்சமூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா நடைபெறும். செப்டம்பர் 8ம் தேதி இரவு 9 மணிக்கு கரூர் சித்தர் திருநெல்வேலி நான்கு ரதவீதிகளிலும் வீதியுலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானுார் அம்பலவாண சுவாமி கோயிலை சென்றடைவார்.
9 ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு திருநெல்வேலியில் இருந்து சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரவருணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி கடந்து மானுார் சென்றடைவர். 10 ஆம் தேதி மானுார் அம்பலவாண சுவாமி கோயிலில் வைத்து கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சியளித்து சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்வு காலை 7:15 மணி முதல் 8:15 மணிக்குள் நடைபெறும். அப்போது வரலாற்றுப்புகழ் மிகுந்த புராணப்பாடல் பாடப்பெற்ற ஆவணி மூலம் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.